Français
English
தமிழ்
06-03-2011, ஞாயிற்றுக்கிழமை A.F.T மைதானத்தில் நடைபெற்ற முதல் அரசியல் எழுச்சி மாநாட்டில் மாண்புமிகு மக்கள் முதல்வர் N.R அவர்கள் தலைமையில் கூடிய கூட்டத்தில் ஏகமனதாய் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
   தீர்மானம் - 1
புதுச்சேரி மாநிலத்தின் தனித்தன்மையை காத்திடவும், மாநில வளர்ச்சிக்கு வித்திடவும், அமைதியான, வளமான எதிர்காலம் அமைந்திடவும், நிலையான, நேர்மையான, தூய்மையான, ஊழலற்ற நல்லாட்சி அமைந்திட அகில இந்திய N.R காங்கிரஸ் பேரியக்கம் அயராது பாடுபடும்.
   தீர்மானம் - 2
புதுச்சேரியில் தொழில் வளம் பெற முனைப்புடன் கூடிய புதிய தொழிற்சாலைகள் அமைந்திடவும், மக்களின் உயிருக்கு கேடு விளைவிக்கும் சுற்றுச்சூழலை பாதிக்கும் ஆபத்தான தொழிற்சாலைகள் முற்றிலும் அகற்றப்பட அகில இந்திய N.R காங்கிரஸ் பேரியக்கம் பாடுபடும். புதிய பல தொழிற்சாலைகள் உருவாக்கத்தின் மூலம் புதுச்சேரியில் படித்த இளைஞர்களுக்கு பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்கப்படும். வேலைவாய்ப்பில் நேர்மையான, வெளிப்படையான கொள்கைகள் பின்பற்றப்படும். புதுவை மாநிலத்தில் விவசாயிகளின் நலனை பாதுகாக்க தோற்றுவிக்கப்பட்ட வாரியங்கள் அனைத்தும் இன்று முற்றிலுமாக சீரழிந்து சிதைக்கப்பட்ட நிலையில் உள்ள அவற்றை சீரமைத்து விவசாயிகளின் வாழ்வு மேம்படவும், மறுமலர்ச்சி பெற்றிடவும், வேளாண் பணி சிறந்திடவும் இவ்வியக்கம் தொடர்ந்து பாடுபடும்.
   தீர்மானம் - 3
எட்டாக் கனியாக இருந்த உயர் கல்வி, மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளில் ஏழை மாணவர்கள் இலவச கல்வி கற்பதற்கு வேண்டி பெருந்தலைவர் காமராஜரின் அரசியல் அடிச்சுவட்டை பின்பற்றி, ஏழை எளிய குடும்பங்களில் அனையாத கல்வி தீபம் ஏற்றிய மக்கள் முதல்வர் N.R அவர்களின் பணி தொடர்ந்திட, புதுச்சேரி மக்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம் பிடித்திருக்கும் மக்கள் முதல்வர் N.R அவர்களின் சீரிய தலைமையில் நல்லாட்சி மீண்டும் அமைந்திட நாம் அனைவரும் இந்நன்னாளில் உறுதியேற்போம்.
   தீர்மானம் - 4
ஜாதி, மத, இன பாகுபாடின்றி புதுச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் ஆகிய பிரதேசங்களின் வளர்ச்சி சமச்சீருடன் நடைபெற பல்வேறு புரட்சித் திட்டங்களுடன் எதிர்கால வளமான - வலிமையான - ஒளிமயமான புதுச்சேரி மாநிலத்தை உருவாக்க மக்கள் முதல்வர் N.R தலைமையில் அணி வகுக்கவும், அவருடைய அணியில் இடம் பெறுகின்றவர்களுக்கு வாக்களித்து வெற்றிப்பெறச் செய்ய மக்களுக்கு தாழ்மையான வேண்டுகோள்.
   தீர்மானம் - 5
மக்கள் முதல்வர் N.R அவர்களால் கொண்டு வரப்பட்டு அனைவராலும், பாராட்டப்பட்டு அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தடை செய்து புதுச்சேரி மக்களுக்கு விரோதமாக செயல்படும் இந்த காங்கிரஸ் ஆட்சியை அரசு கட்டிலில் இருந்து அகற்ற மக்கள் சக்தி துணையோடு புதிய அரசியல் மாற்றத்தை உருவாக்க நாம் அனைவரும் அயராது பாடுபடுவோம். மக்கள் தீர்ப்பே மகேசன் துணை என்பார்கள். எனவே மக்களும் நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும்.
   தீர்மானம் - 6
நமது அகில இந்திய N.R காங்கிரஸ் பேரியக்கத்தின் தேர்தல் பிரகடனம்
நம் தாய் - நம் மண் - நம் மக்கள் என்ற லட்சிய குறிக்கோளொடு செயல்படுவோம்.
இவண்
V.பாலன்
பொதுச்செயலாளர்